தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – விருச்சிகம்

2029

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், புரட்சிகரமான தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். தாயா தாரமா என்ற தடுமாற்றம் உங்களுக்கு அடிக்கடி வரும். சடங்கு, சம்பிரதாயங்களை விட சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும்.

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். 2018ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். அவர் வழி உறவுகளால் ஆதரவு உண்டு. சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள்.

கல்யாணம், சீமந்தம், காது குத்தி என வீடு களைக்கட்டும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். ஆனால் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். வருடம் முடியும் சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம், காரியத் தடங்களெல்லாம் வந்து போகும். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்து சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள் வந்து செல்லும்.

கால்சியம் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதரம் வகையில் ஆதரவு பெருகும் அவ்வப்போது களைப்படைவீர்கள். 29.03.2018 முதல் 21.04.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன்மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. இந்த 2018ம் வருடம் முழுக்க ராகு 9ம் வீட்டில் நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் கசப்புணர்வுகளும் வந்து செல்லும். 02.05.2018 முதல் 30.10.2018 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் தன்னம்பிக்கை குறையும். தாழ்வான எண்ணங்கள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் தனபூர்வ புண்யாதிபதியான குருபகவான் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசை போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தடைபட்டு முழுமையடையும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்குள் அமர்வதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும்.

பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஜென்ம குருவாக வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது.

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். சில நேரங்களில் சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களும் அவ்வப்போது வரும்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு சுமாராக இருக்கும். பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்க்ராப், சிமென்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களின் விடா முயற்சியையும், கடின உழைப்பையும் நேர் மூத்த அதிகாரி புரிந்து கொள்ள மாட்டார். சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. அதிக சம்பளத்துடன், சலுகைகளுடன் புது வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். அலைச்சல், டென்ஷன் இருக்கும்.
அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபப்படாதீர்கள். கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். வகுப்பாசிரியர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. ஒருமுறை படித்தால் மட்டும் போதாது, அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை விட வயது குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! எலித் தொல்லையால் மகசூல் குறையும். தவறான உரங்களைப் பயன்படுத்தாதீர்கள். டிராக்டர், கலப்பை, பம்பு செட் அடிக்கடி பழுதாகும். இந்த 2018ம் ஆண்டு வேலைச்சுமையையும், மன அமைதியின்மையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.