திருமண நேரத்தில் மாயமான மணமகன் : கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்!!

657

கண்ணீர் அஞ்சலி

கன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக சொந்த ஊருக்கு திரும்பிய சதிஷ்குமாருக்கும், பரைக்கோடு பகுதியை சோ்ந்த பொறியியல் பட்டதாாியான சோபினி என்ற பெண்ணுக்கும் நிச்சம் செய்யப்பட்டது. நிச்சயம் நிகழ்ச்சியின் போது சதீஸ், சோபினி கையில் தங்க காப்பு அணிவித்தார். இதனை பார்த்த இருவீட்டாரும், மணமக்களுக்கு பிடித்துப் போய்விட்டதாக கருதி திருமண ஏற்பாடுகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தனர்.

பெண் வீட்டு முறைப்படி நேற்று இரவு வரவேற்பு மற்றும் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை திருமணம் நடைவிபெறவிருந்த, பொன்னரசி மண்டபத்திற்கு இருவீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் வரத்துவங்கினர். இதனால் திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்த நிலையில் மணப்பெண் வந்த பின்னரும், மணமகன் வராததால் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் தேட ஆரம்பித்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், சதீஷின் இருசக்கர வாகனம் தக்கலை பஸ் நிலையத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதற்கிடையில் திருமணம் நின்றுவிட கூடாது என்பதற்காக, சோபினிக்கு அழகியமண்டபத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. மேலும் ஓடிப்போன மாப்பிள்ளைக்கு பாடம் புகட்டும் விதமாக சோபினியின் உறவினா்கள் சதீஷ்குமாா் இறந்ததாக போஸ்டா் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.