பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம் : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை!!

559

வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரியும் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர் (32). மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வரும் இசக்கி, வழக்குபோல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக கிராமம் அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இசக்கியை கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த இசக்கி ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் விரட்டி படுபயங்கரமாக தலை, கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்தது இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் இசக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இசக்கி தனது வீட்டின் அருகே உள்ள வேற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இது இருவரின் வீட்டிற்கு தெரியாமல் இருந்தாலும், கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தனிமையில் இருவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் சண்டையில் புகுந்து சமாதானம் செய்து வைத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இசக்கி பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது ஆணவக்கொலையாக இருக்குமா என பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.