2 வயதுக் குழந்தையை கடித்துத் தின்ற தெரு நாய்கள் : கோர சம்பவம்!!

604

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பீம் நகர் குடியிருப்பு பகுதியில் திங்கள் இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை சூழ்ந்து கொண்ட தெரு நாய்கள் கூட்டம், அதைக் கடித்து அருகில் உள்ள கரும்பு வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

அங்கு வைத்து குழந்தையை அனைத்து நாய்களும் சேர்ந்து தின்று தீர்த்துள்ளன. பின்னர் சம்பவம் பற்றித் தகவல் அறிந்த பகுதிவாசிகள் ஒன்று கூடி. மோடிநகர் நகராட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பல நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மோடி நகர் மண்டல துணை நீதிபதி பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.