என் கண்முன்னே 39 பேரையும் படுகொலை செய்தனர்: உயிர்தப்பியவரின் கண்ணீர் பேட்டி.

814

ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் கூறிய நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியவர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திலையில் ஈராக்கில் இருந்து தப்பி வந்த, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹ்ர்ஜித் மாசிஹ் கூறுகையில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு, ஈராக்கில் நாங்கள் 40 இந்தியர்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தோம்.

 

அப்போது, அங்கு துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் எனது கால் மூட்டில் குண்டடி பட்டு நான் கீழே விழுந்தேன். எனது கண் முன்னே அனைவரும் கொல்லப்பட்டனர்.

பின்னர், மயக்க நிலைக்கு சென்ற என்னை யாரோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் வங்கதேச தூதரகம் உதவியுடன் இந்தியா வந்தேன்.

39 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அவர்களின் குடும்பத்தினரிடம் கூறி வந்தது. ஆனால், அவர்கள் கொல்லப்பட்டதாக நான் மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன்’ என ஹர்ஜித் மாசிஹ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹர்ஜித் மாசிஹ் கூறியுள்ளதை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். மேலும், ‘மாசிஹ் எவ்வாறு அங்கிருந்து தப்பி வந்தார் என்பதை கூற மறுக்கிறார்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர் கூறுகையில் ‘39 பேரும் எப்போது கொல்லப்பட்டனர் என்ற தகவலை அரசு வெளிப்படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சுஷ்மா சுவராஜ், ‘வெளிநாட்டில் நடந்த சம்பவங்களை பாராளுமன்றத்தில் தெரிவிப்பது தான் முறையான ஒன்று. ஈராக்கில் அவர்கள் உயிருடன் இருந்ததற்கோ, கொல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் 2014 முதல் 2017 வரை கிடைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.