பெண்களை ரகசியமாக சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்து சென்ற போலீசார் : 7 நாள் திட்டம் அம்பலம்!!

627

சபரிமலை

சபரி மலைக்கு பெண்கள் தரிசிக்க செல்ல கூடாது என்று பல எதிர்ப்புகள் இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டது.

அந்தவயைில் மகரவிளக்கு சீசன் காலத்தில் பெண்களை எப்படியாவது சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்து மலப்புரம் கொயிலாண்டியை சேர்ந்த பிந்து (வயது 40), கோழிக்கோட்டை சேர்ந்த கனகதுர்கா (44) என்ற 2 பெண்களையும் சபரி மலைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டது அரசு.

இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். சன்னிதானம் அருகே போராட்டக்காரர்கள் தடுப்பு சுவர் போல திரண்டு இரண்டு பெண்களையும் வழிமறித்தனர். இதனால் சன்னிதானம் செல்லமுடியாமல் பிந்துவும், கனகதுர்காவும் பாதியிலேயே வீடு திரும்பினர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் அவர்களை தேடிய போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் உறவினர்கள் அங்கு சென்ற போது ஆஸ்பத்திரியில் அவர்கள் இல்லை.

எனவே அவர்கள் இருவரும் போராட்டக்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்து அமைப்புகளும் இதை நம்பினர். இதனையடுத்து மீண்டும் பிந்து, கனகதுர்கா இருவரையும் மீண்டும் சபரிமலை அழைத்து செல்ல போலீசார் ரகசிய திட்டம் வகுத்தனர்.

சன்னிதானம் செல்ல போலீசார் முடிவு செய்த நாள் ஜனவரி 2. இந்த நாளில் சபரிமலையில் கூட்டம் அதிகம் இருக்காது மற்றும் ஜனவரி 1-ந்தேதி நடைபெற்ற மகளிர் மனித சுவர் போராட்டம் காரணமாக அவரவர் ஊருக்கு செல்வார்கள் என்று போலீசார் கருதினர்.

சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட போலீசார் கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர், உளவுத்துறை டி.ஐ.ஜி. சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலை அழைத்து செல்ல தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை அவர்கள் சாதாரண உடையில் பம்பை வந்தனர். வந்து சேர்ந்த போலீஸ் படை பிந்து, கனகதுர்கா இருவருக்கும் சாதாரண உடையில் பாதுகாப்பு அளித்தனர். சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்லும் டிராக்டர் பாதையில் பிந்து, கனகதுர்கா இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

அதிகாலை 1.30 மணிக்கு இவர்களின் பயணம் தொடங்கியது. 3 மணிக்கு பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்றடைந்துனர். 18 -ம் படியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊழியர்கள் கோவிலின் பின்பகுதியில் உள்ள வாயில் வழியாக செல்லத்தொடங்கினர். அவர்களுடன் பிந்துவும், கனகதுர்காவும் இணைந்து கொண்டனர்.

அப்போது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு நின்ற உயர் அதிகாரிகள் அவர்களை விரட்டி அர்ச்சகர்கள், தந்திரிகள் யாரும் கவனிக்காத நிலையில் பிந்து, கனகதுர்கா இருவரும் மிக எளிதாக சன்னிதானம் சென்றடைந்து சாமி தரிசனமும் செய்தனர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானத்தில் தரிசனம் முடிந்து பம்பை திரும்பிய பின், பத்திரிகையாளர்களை சந்தித்து தரிசனம் செய்ததை கூறிய பிறகே இந்த விபரம் பக்தர்களுக்கு தெரியவந்தது.

இச்சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும் அறிந்து கொண்ட பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். தற்போது அவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்கள் இருவரை சன்னிதானம் வரை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்துவிட்டோம் என்று அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.