காதலனை காண சென்னைக்கு ஆசையாக வந்த இலங்கை பெண் : விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

616

அதிர்ச்சி சம்பவம்

இலங்கையை சேர்ந்த இளம்பெண் காதலனை காண சென்னை வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி (22). காஞ்சீபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (22). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மலர்மேரிக்கும், அவினாஷ்க்கும் சமூகவலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுகாதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இருவரும் சமூகவலைதளம் மூலம் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை வந்தார். மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார். காதல்ஜோடி சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக ஜாலியாக சென்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25-ம் திகதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.

மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாக தொங்கினார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மலர்மேரியின் காதலன் அவினாஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.