புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவுகின்ற, மச்சம்போல் தோற்றமளிக்கும் Skin Implant ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பொதுவாக ஒரு சாதாரண கட்டிபோல் தோன்றும் புற்றுநோய், பிரச்சினைகளை உருவாக்கத் தொடங்கிய பின்தான் மக்கள் மருத்துவ உதவியையே நாடுவார்கள்.
ஆனால் அதற்குள் நிலைமை பெரும்பாலும் கைமீறிப்போயிருக்கும். ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பின் சிறப்பே அது நோயின் ஆரம்ப கட்டத்திலேயே, அதாவது அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னமேயே புற்றுநோயைக் கண்டுபிடித்துவிடும் என்பதுதான்.
ஓராண்டிற்கும் மேலாக ஆய்வக விலங்குகள் மீது பரிசோதிக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு புரோஸ்டிரேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வல்லது.இந்தக் கண்டுபிடிப்பு, புற்றுநோய் உருவாகும் நேரத்தில் இரத்தத்தில் அதிகரிக்கும் கால்சியத்தைப் பொருத்து ஏற்படும் விளைவுகளின் அடிப்படையில் செயல்படுகிறது.
இரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகரிப்பதோடு நீண்ட நேரத்திற்கு அது தொடர்ந்திருந்தால் இந்த ‘Biomedical tattoo’வில் உள்ள கால்சியம் சென்ஸார், டைரோசினேஸ் என்னும் என்சைமை உருவாக்கும்.அது அமினோ அமிலத்தை மெலானின் என்னும் நிறமியாக மாற்றுவதால் இந்த skin implant பொருத்தப்பட்ட இடம் கருமையாக மாறும்.
உடனே மருத்துவ உதவியை நாடி அது எதனால் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.சுமார் 40 சதவிகிதம் புற்றுநோய்களை இந்த ‘Biomedical tattoo’ மூலம் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.