6 வயது சிறுமி துஸ்பிரயோக விவகாரம் : போலீசில் சிக்கிய மேலும் ஒருவர்!!

1525

சிறுமி துஸ்பிரயோக விவகாரம்

தமிழகத்தின் கோவையில் சிறுமி பா‌லியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோவையில் 6 வயது சிறுமி கடந்த மாதம் 25 ஆம் திகதி திடீரென்று மாயமானார். இந்த நிலையில் இதன் அடுத்த நாள், 26 ஆம் திகதி குடியிருப்பின் அருகாமையிலேயே சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு சந்தோஷ்குமார் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மேலும் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் யாருக்கும் தொடர்பு இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சந்தோஷ்குமாரை காவல்துறையினர் அழைத்துச்‌ சென்றனர்.

இதனிடையே, மருத்துவப் பரிசோதனைக்காக சந்தோஷ்குமாருடன் மேலும் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டது போன்ற வீடியோ‌ ‌சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இதன்மூலம் இந்த கொடூர வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசா‌ரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையா‌க தண்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.