லண்டனில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் : சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்த பரிதாபம்!!

736

இளம்பெண் தற்கொலை

லண்டனில் கணவருடன் வசித்த இந்திய பெண் கணவர் மற்றும் அவரின் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (32). இவருக்கும் வம்சி ராவ் என்பவருக்கும் கடந்த 2011ல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2012ல் லண்டனுக்கு இருவரும் சென்றனர். அங்கு சென்றதில் இருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு ஸ்ரீலதாவை வம்சி கொடுமைப்படுத்தி வந்தார்.

தம்பதிக்கு குழந்தை பிறந்த பின்னர் வம்சியின் கொடுமைகள் அதிகரிக்க தொடங்கியது. இது குறித்து ஸ்ரீலதா இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடம் சொல்லி பலமுறை அழுதுள்ளார். மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வேதனையிலேயே ஸ்ரீதலாவின் பெற்றோர் உயிரிழந்தனர்.

பின்னர் வம்சி, ஸ்ரீலதா மற்றும் அவர் குழந்தை ஆகிய மூவரும் கடந்த 2016-ல் இந்தியாவுக்கு வந்தனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் பிரித்தானியா சென்றனர். இதையடுத்து கணவரின் கொடுமை தாங்காமல் லண்டன் ரயில் முன்னால் பாய்ந்து ஒருமுறை ஸ்ரீலதா தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2018 ஜூன் மாதம் மூவரும் மீண்டும் ஹைதராபாத்துக்கு வந்த நிலையில் தனது பெற்றோரிடம் மனைவி மற்றும் மகளை விட்டு வம்சி பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து வம்சியின் பெற்றோர் ஸ்ரீலதாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களின் கொடுமை தாங்காமல் ஸ்ரீலதா மும்பையில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீலதாவின் உறவினர்கள் அவரின் சடலத்தை எடுத்து கொண்டு அவரின் மாமியார் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஸ்ரீலதாவின் மரணத்துக்கு அவர் கணவர் வம்சி மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்கள் வரும் தகவலை அறிந்து இருவரும் வீட்டை பூட்டி கொண்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.