புதிய அடையாளங்களுடன் கனடாவில் தனது வாழ்வைத் தொடங்கும் ஆசியா பீவி!!

590

ஆசியா பீவி

பாகிஸ்தானில் மத தூஷணம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி கனடாவில் புதிய அடையாளங்களுடன் வாழ்வைத் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி, பல தடைகளை தாண்டி, தற்போது கனடா சென்றடைந்துள்ளதாகவும், தனது குடும்பத்துடன் இணைந்து விட்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்துள்ள ஆசியா பீவியின் வழக்கறிஞரான Saiful Malook, ஆசியா பீவி பாகிஸ்தானை விட்டு சென்று கனடாவை அடைந்துவிட்டார். அவர் தனது குடும்பத்துடன் இணைந்துவிட்டார், நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது என்றார்.

இதற்கிடையில் கனடாவில் ஆசியா பீவியின் குடும்பத்தார் புதிய அடையாளங்களுடன், பாதுகாப்பாக தங்கள் வாழ்வை தொடங்க உள்ளதாக பிரித்தானிய பாகிஸ்தானி கிறிஸ்தவ கூட்டமைப்பைச் சேர்ந்த Wilson Chaudhry என்பவர் தெரிவித்தார்.

ஒரு காலகட்டத்திற்கு மேல், நிலைமை சற்று சீரானதும், அவர்கள் சாதாரண வாழ்வைத் தொடங்குவார்கள் என்றார் அவர். நிச்சயம் பாகிஸ்தானில் தாங்கள் வாழ்ந்த அடையாளங்களுடன் அவர்கள் வாழப்போவதில்லை என்றார் Wilson Chaudhry.

தங்கள் நாட்டில் எத்தகைய சூழலில் ஆசியா பீவியின் குடும்பத்தார் வாழப்போகிறார்கள் என்பது குறித்து கனடா அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.