சடலத்துடன் பயணித்த பெண்
தனது காரை பல்பொருள் அங்காடி ஒன்றில் நிறுத்திவிட்ட பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு கனேடிய பெண், திரும்பி வரும்போது காரைச் சுற்றி பொலிசார் குவிந்திருப்பதைக் கண்டு குழப்பமடைந்தார்.
காரை நெருங்கிய ரேச்சல் என்ற அந்த பெண்ணிடம், அவரது காரை சோதனையிட வேண்டும் என பொலிசார் கேட்டுள்ளனர். என்ன விடயம் என்று கேட்டதற்கு, அவரது காரில் சடலம் ஒன்று இருப்பதாக சிலர் புகாரளித்திருப்பதாக பொலிசார் தெரிவிக்க, சிரித்துக் கொண்டே பொலிசாரிடம் கார் சாவியைக் கொடுத்துள்ளார் ரேச்சல்.
காரை சோதனையிட்ட பொலிசார், காரில் இருந்த அழுகிய பிணம் போல காணப்பட்டது, பிணம் அல்ல, அது ஒரு பொம்மை என்பதைத் தெரிந்து கொண்டதும் ரேச்சலை போக அனுமதித்தனர். ஹாலோவீன் பண்டிகையை அதிகம் விரும்பும் ரேச்சல், அதற்காகத்தான் இந்த பொம்மையை வாங்கியதாக பின்னர் தெரிவித்தார்.
அத்துடன் நடந்த சம்பவத்தை முகநூலில் பதிவேற்றம் செய்த அவர், தனது காரிலிருந்த பொம்மையைக் கண்டு பயந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, தவறாமல் நடவடிக்கையில் இறங்கிய பொலிசாருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரது இந்த பதிவு வைரலாகி உடனடியாக 4,000 லைக்குகளையும் 2,000 ஷேர்களையும் பெற்றது.