அழகிய இளம்பெண்
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணை பாம்பு ஒன்று கடிக்க, அவர் எப்படி இரண்டு முறை மரணத்துக்கு சமீபமாக சென்று திரும்பினார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.
ஒண்டாரியோவைச் சேர்ந்த Shalabha Kalliath, விடுமுறைக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார். கடற்கரையில் அவர் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென காலில் பயங்கர வலி ஏற்பட, காலைப் பார்த்தால், அவரது பெரு விரலிலிருந்து ஒரு பாம்பு தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.
பட்டென Shalabha காலை உதற, ஒருவர் வந்து பாம்பைக் கொன்றிருக்கிறார். சற்று நேரத்தில் Shalabha மயங்கி விழுந்திருக்கிறார். தோழி ஒருவர் அவரைக் கொண்டு ஒரு கிளினிக்கில் சேர்த்திருக்கிறார். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் Shalabhaவிடம் நீங்கள் செத்துப்போய்விட வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
வலியும் மயக்கமுமாக Shalabhaவின் நினைவு தடுமாறிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள் மனதையும் என்னவோ செய்ய, அந்த பாம்பின் விஷம் அவரது இரத்தத்தில் கலந்து விட்டதாகவும் அதை முறிக்கும் மருந்து தங்களிடம் இல்லை என்று அந்த கிளினிக் மருத்துவர்கள் கூற, வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் Shalabha.
தான் பார்த்ததிலேயே அது மிகவும் மோசமான மருத்துவமனை என்று கூறும் Shalabha, அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு மருத்துவர், மனிதர்கள் என்றால் சாவும் சகஜம்தான், சாவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே என்று கூற, ஏற்கனவே வெறுப்பிலிருந்த Shalabha , நல்லது ஆனால் நான் சாக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் இன்னொருவர் Shalabhaவில் காலை அகற்ற வேண்டியிருக்கும் என்று கூற, Shalabhaவால் தான் எங்கிருந்து வருகிறேன் என்பது போன்ற விடயங்களை நினைவு கூர முடியாததால் அவரது காப்பீட்டு ஆவணங்களை நிரப்ப இயலாமல் போயிருக்கிறது.
கடைசியாக விஷ முறிவு மருந்து ஏற்றப்பட, ஒரு வழியாக அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, கனடா திரும்பியிருக்கிறார் Shalabha. செத்துப் பிழைத்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த Shalabha வுக்கு அவ்வப்போது உடல் மிகவும் பலவீனமாக, மீண்டும் ஒரு கிளினிக்குக்கு சென்றிருக்கிறார் அவர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ந்துபோய், உடனடியாக அவரை கனடாவிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது இரத்தம் பரிசோதிக்கப்பட்டதில் அதில் இன்னும் பாம்பின் விஷம் மீதி இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், Shalabhaவிடம் அவர் உயிரோடிருப்பது ஆச்சரியம் என்றும், எந்த நேரமும் அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும், சாதாரணமாக கீழே விழுந்திருந்தால் கூட உள்ளுறுப்புகளில் இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவிலும் அவரை கடித்த அந்த பாம்பின் விஷத்திற்கான மாற்று மருந்து இல்லாததால், வன விலங்குகள் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அதேபோன்ற மற்றொரு பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாற்று மருந்து Shalabhaவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஓரளவு உடல் நலம் தேறி விட்டாலும் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது Shalabhaவுக்கு. இரண்டு முறை உயிர் தப்பிய நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறும் Shalabha, வேலை ஒன்றை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.