இங்கு ஒரு மணி நேரம் இருந்தால் மரணம் நிச்சயம்!!

811

மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ வழக்கத்தை விட இன்றைக்கு மிக வேகமாக நம்முடைய சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து வருகிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம்.

டஸ்ட் அலர்ஜி,ஸ்மோக் அலர்ஜி,ஸ்மெல் அலர்ஜி என்று விதவிதமான பெயர்களுடன் நோய்களும் நம்மை ஆட்கொண்டு பெரும் தொல்லையை கொடுக்கிறது, அதோடு மிகவும் சிறிய வயதிலேயே குழந்தை பருவத்திலிருந்தே மூச்சுப் பிரச்சனை சுவாசப் பிரச்சனை ஆகியவை ஏற்படுவதை நாம் பார்கிறோம்.
இப்போது மாசுபாடு பற்றிய ஒரு அலாரம் அடித்து நம்மை சுதாரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

சுற்றுப்புறச்சூழல் கெடுவது ஒன்றும் தனிப்பட்ட பாதிப்பு அல்ல, நம்மைச் சுற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை பரவிக் கொண்டிருக்கிறோம்.

சுவாசிக்கும் காற்றில், சத்தானது. இயற்கையானது என்று சொல்லும் உணவில், குடிக்கும் தண்ணீரில் என எல்லாவற்றிலுமே விஷம் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த மாசுபாடு குறித்த சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்திருக்கிறோம், படித்து விழித்துக் கொள்ளுங்கள். உங்களை காப்பாற்றிக் கொள்வதுடன் அடுத்து வரும் சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்ற கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

கடலில்..
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 14 பில்லியன் பவுண்ட் கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோ கிராம் வரையிலான குப்பையை கடலில் சேர்கிறோம்.

இவற்றில் பெரும்பாலானது ப்ளாஸ்டிக் பொருட்கள். கடற்கரையில் வீசும் குப்பைகள் மட்டுமல்லமல் வழிநெடுகிலும் எடுத்து வருகிற குப்பைகள் எல்லாம் கடலில் தானே போய் சேருகிறது.

இதனால் கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் அமிலத்தன்மையுடனும் கொத்து கொத்தா இறந்து கொண்டும் இருக்கின்றன.

பசிபிக் பேட்ச்..
இப்படி கடலில் சேர்ந்த குப்பைகள் எல்லாம் சேர்ந்து பசிபிக் கடலில் பசிபிக் பேட்ச் என்ற பெயரில் பெரும் குப்பை கிடங்காக மாறி கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகமான சுற்றளவில் இந்த குப்பை பரவியிருக்கிறதாம். அப்படியானால் பசிபிக் கடலிலின் கிட்டத்தட்ட பாதியளவு வரை குப்பைகள் மிதந்து கொண்டிருக்கிறது.

நிலத்திலும் ..
கடலில் மட்டும் தான் இவ்வளவு குப்பை என்று நினைத்து விடாதீர்கள், நிலத்திலும் ஏகப்பட்ட குப்பைகளை நாம் சேமித்துக் கொண்டிருக்கிறோம். நிலத்தில் கொட்டக்கூடிய 80 சதவீத குப்பைகள் மறு பயன்பாடு செய்து பயன்படுத்தலாம்.

குப்பையை ரீசைக்கிள் செய்கிற வசதியும்,அதற்கான முன்னெடுப்புகளும் இல்லாததே இவ்வளவு குப்பைகள் சேருவதற்கு முக்கிய காரணியாக இருக்கின்றன.

கார்கள்..
இப்போது வரை உலகத்தில் கிட்டத்தட்ட 500 மில்லியன் கார்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே 2030 ஆன் ஆண்டிற்குள் பில்லியனைத் தாண்டும் என்கிறார்கள். அப்படியானால் இப்போது ஏற்படுகிற காற்று மாசுபாட்டினை விட இரண்டு மடங்கு காற்று மாசுபாடு அதிகரிக்கும்.

அமெரிக்கர்கள்..
உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் தான். ஆனால் அவர்கள் உருவாக்குகிற குப்பைகளின் அளவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட உலகின் பிற பாகங்களிலிருந்து உருவாக்கப்படும் குப்பைகளில் இருந்து சுமார் 30 சதவீதம் வரை அமெரிக்காவிலிருந்து வீசப்படுகிற குப்பைகள் தான்.
அதே நேரத்தில் இவர்கள், உலகின் கால்வாசி இயற்கையை இவர்கள் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கடலில் எண்ணெய்..
கடந்த வருடம் கடலில் எண்ணெய் கொட்டியிருக்க, அதனை வாளியைக் கொண்டு அல்லும் அளவிற்கு நம்முடைய டெக்னாலஜி இருந்ததைக் கண்டு தான்,நம்முடைய அறிவியல் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து தெரிந்து கொண்டோம்.

சிலருக்கு அப்போது தான் கடலில் இப்படியான அசம்பாவிதங்கள் கூட நடக்கும் என்ற விவரமே தெரிந்திருக்கும்.

கடல் மாசடைந்து விட்டது, என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள் ஆனால் உண்மை என்ன தெரியுமா?

கடலில் எண்ணெய் கொட்டுவது என்பது விபத்து ஏற்படும் போது மட்டுமல்ல, சாதரணமாக கடலில் எண்ணெய் கொண்டு செல்லப்படும் போதே அது கடலில் சிந்தும்.

உதாரணமாக இப்போது ஒரு மில்லியன் டன் எண்ணெயை கடல் வழியாக கொண்டு செல்கிறார்கள் என்றால் கிட்டதட்ட ஒரு டன் அளவிலான எண்ணெய் கடலில் சிந்துகிறது.

உலகிலேயே சுத்தமான இடம்..
உலகிலேயே எந்த மாசுபாடும் இல்லாத சுத்தமான இடம் என்று நம்பப்படும் இடம் அண்டார்டிகா, இங்கு மனிதன் வசிக்கவே முடியாத அளவிற்கு குளிர் இருக்கும். இங்கு மனிதர்கள் சென்று வருவதே சாதனையாக கருதப்படுகிறது.

இங்கே ராணுவ பயிற்சிகள்,தண்ணீர் சுத்திகரிப்பு, மற்றும் அணுகுண்டு பரிசோதனை என எதுவும் மேற்கொள்ளக்கூடாது.

சீனா..
அதிக காற்று மாசுபாடு கொண்டுள்ள நாடுகளில் முதலிடத்தை பிடிப்பது சீனா. உலகிலேயே சீனாவில் காற்றின் மாசுபாடு அதிகம்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நுரையிரல் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.

ஏனென்றால் அதிலிருக்கும் நச்சுக்கள் அப்படி, அதில் எவ்வளவு நச்சு இருக்கிறது தெரியுமா ஒரு நாளைக்கு 21 சிகரெட் புகைத்தால் எத்தைய பாதிப்பு நம் நுரையிரலுக்கு ஏற்படுமோ அதேயளவு பாதிப்பு பீஜிங்கில் சுவாசித்தால் உண்டாகும்.

அதை விடக் கொடுமையான விஷயம் இது…. கிட்டத்தட்ட 700 மில்லியன் சீனர்கள் மாசடைந்த கழிவுகள் நிறைந்த நீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது சீனாவில் வாழுகின்ற மக்களின் பாதியளவு வரை இப்படியான நீரை தான் அன்றாடம் குடிக்கிறார்கள்.

இந்தியா..
இந்தியாவைப் பொருத்தவரையில் அதிக மாசடைவது நீர் தான் தான். கிட்டத்தட்ட 80 சதவீத கழிவுகள் கங்கையில் தான் கொட்டப்படுகிறது.

ஹிந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை இப்போது குப்பை கிடங்காக மாறிவிட்டிருப்பது தான் கொடுமை.

அதிலும், கங்கையில் இறந்தால் புண்ணியம், என்று சொல்லி இறந்தவர்களை கங்கை நதிக்கரையில் எரிப்பது வழக்கம், அதன் சாம்பல்,பாதி எரிந்த நிலையிலான உடல்கள் எல்லாம் கங்கையில் வீசப்படுகிறது.

சத்தம்..

எல்லா வகையான மாசுக்களையும் நம்முடைய வசதிக்காக சோம்பேறிதனத்திற்காகத்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம். இதே நேரத்தில் நம்மால் தவிர்க்க முடிந்த ஒரு மாசு என்றால் அது ஒலி மாசுபாட்டினை குறிப்பிடலாம்.

அதிக சத்தங்களை தொடர்ந்து கேட்பதால் மன அழுத்தம், கேட்கும் திறன் குறைவது, தூக்கப் பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு குறைகள் நமக்கு ஏற்படுகிறது.

ரேடியோ ஆக்டிவ்..

சோவியத் யூனியனில் இருக்கக்கூடிய கராசே என்ற ஏரியில் ரேடியோ ஆக்டிவ் கழிவுகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள். உலகிலேயே அதிக மாசுள்ள பகுதி இது தான்.

ஒரு மணி நேரம் இங்கிருந்தால் உங்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படும். நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என்றால் மரணம் நிச்சயம்.

புதிய குப்பைகள்..

தற்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டில் புதிய லிஸ்ட்டில் சேர்ந்து மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருவது எலக்ட்ரானிக் வேஸ்ட். ஆரம்பத்தில் எலக்ட்ரானிக் பயன்பாடு அவ்வளவாக இருந்திருக்கவில்லை அதன் பிறகு மெல்ல வளர்ந்து வந்தாலும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால் இப்போதோ ஒருவரே மூன்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதும் அளவிற்கு வந்து விட்டார்கள். அதோடு, புதுப்புது வெர்சன்களில் தொடர்ந்து இறக்கிக் கொண்டேயிருக்க மக்களும் அப்டேட் ஆகிறேன் என்ற போர்வையில் புதிய எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.

நம் வீட்டில் இருந்த பழைய பொருட்களை மாற்றி விட்டு புதிய பொருளை வாங்கிவிட்டோம். எப்போதாவது நாம் கொடுத்த பழைய எலக்ட்ரானிக் பொருட்களை என்ன செய்கிறார்கள் என்று யோசித்திருக்கிறோமா?

மீன்கள்..

பிரிட்டனில் இருக்கும் ஆறுகளில் உள்ள மீன்களின் இணையும் நேரம்,முற்றிலுமாக மாறியிருக்கிறது, விலங்குகள் அந்தந்த பருவதில் இணைந்து குட்டிகளை பெற்றெடுக்க வேண்டும் என்பது விதி ஆனால் கடுமையான மாசுபாடுகாரணமாக அது முற்றிலும் சிதைந்து போயிருக்கிறது.

அமெரிக்காவிலும் இதே பிரச்சனை, கிட்டத்தட்ட அமெரிக்காவிலிருக்கும் நதிகளில் 40 சதவீதம் கடுமையான மாசுபாட்டினை சந்தித்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள், ப்ளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிரிழக்கிறது.