தெருவில் உறங்குவோருக்காக பாரீஸ் எடுத்த முடிவு!!

688

வீடின்றி தெருவில் உறங்குபவர்களுக்கு உதவும் நோக்கில் பாரீஸ் மாநகராட்சி “சிறு குமிழ்கள்” என்று அழைக்கப்படும் தற்காலிக உறைவிடங்களை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸின் தெருக்களில் உறங்குவோருக்கான உரைவிடங்களை அதிகப்படுத்தும் நோக்கில் பாரீஸ் மாநகராட்சி இந்த உறைவிடங்களை அமைக்கப்போவதாக வீடற்றோருக்கான பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடற்றோருக்காக இன்னும் நமக்கு 3000 இடங்கள் வேண்டும் என்று Dominique Versini என்னும் அந்த அதிகாரி தெரிவித்தார். “சிறு குமிழ்கள்” என்று அழைக்கப்படும் இந்த தற்காலிக உறைவிடங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

என்றாலும் 3000 பேரில் பாதி பேருக்காவது அவை உதவும் என்று Dominique Versini தெரிவித்தார்.

இந்த தற்காலிக உறைவிடங்கள், எங்கு வைக்கப்படும் என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மேலும் வீடற்றோருக்காக ஒரு பொது குளியலறையும், பெண்களுக்காக ஒரு ஷவரும், இரண்டு உணவகங்களும், அவர்களது பொருட்களை வைப்பதற்கான ஒரு இடமும் கூட அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை மாநகராட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

300 பாரீஸ் அலுவலர்களும், 1700 தன்னார்வலர்களுமாக இணைந்து நடத்திய ஆய்வொன்றில் பாரீஸில் குறைந்தது 3000 பேர் தெருக்களில் உறங்குவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.