கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தமிழர் பலி : சொந்த ஊருக்கு உடலை அனுப்பாமல் அங்கே புதைத்த துயரம்!!

625

கொரோனாவால்..

இந்தியாவின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் 15-ஆம் திகதி வரை மத மாநாடு நடைபெற்றது. மத அமைப்பு ஒன்று மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் ஆண்டு தோறும் நடக்கும்.

டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தான் இப்போது கொரோனா பாதிப்ப் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 1400 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் பலர் தமிழகம் திரும்ப முடியாமல் டெல்லியில் இருக்கின்றனர். சுமார் 300 பேர் வரை அந்த வழிபாட்டு தலத்திலே தங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கொரோனா தீவிரம் பரவியதால், அங்கிருக்கும் அனைவரையும் பொலிசார் மீட்டு தீன் தயாள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு தமிழர்கள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவரான விருத்தாச்சலத்தின் தாஷ்கண்ட் நகரை சேர்ந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு பக்கத்து அறையில் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், அவருக்கு அடுத்த நாள் தான் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அருகே செல்லக் கூடாது என்பதால், அப்பாவின் உடலை மகன் அருகே சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் இருந்தே மகன் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த தகவல் தமிழகத்தின் விருத்தாசலத்தில் இருக்கும் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். ஆனால், உடல் டெல்லியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அந்த நபரின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு, டெல்லியிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் அருகில் இருந்தும் பார்க்க முடியாமல், குடும்பத்தார் அவரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை இனி யாருக்கும் வரக் கூடாது என்று அவரின் உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.