42,000 ஆண்டுகளுக்குமுன் உறைந்துபோன புழுக்களுக்கு மீண்டும் உயிர்!

846

42,000 ஆண்டுகளுக்குமுன் பனிக்கட்டி யுகத்தில் உறைந்து போயிருந்த புழுக்களுக்கு அறிவியலாளர்கள் உயிர் கொடுத்த அற்புதம் ஒன்று நடைபெற்றுள்ளது.

புழுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியுமானால் மனித உயிர்களையும் மீட்டுக் கொண்டு வர இயலும் என்னும் நம்பிக்கை துளிர் விட தொடங்கியுள்ளது.

கம்பளி யானைகள் வாழ்ந்ததாக கருதப்படும் பனிக்கட்டி யுகத்தைச் சார்ந்த பனியில் உறைந்துபோன இரண்டு புழுக்களை பனிக்கட்டியை உருக அனுமதித்து அறிவியலாளர்கள் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர்.

இந்த அறிவியல் சாதனை, ஒரு பல செல் உயிரினம் நீண்ட காலத்திற்கு வாழ முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதால் வானுயிரியல் மற்றும் மனித உடல்களை மீண்டும் உயிர் பெறச் செய்வதற்காக உறையச் செய்தல் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

இந்த ஆய்வின் இறுதி நோக்கம் மனிதனை பனிக்கட்டியில் உறையச் செய்து பல நூற்றாண்டுகளுக்கு உயிருடன் காப்பதாகும்.இந்த அரிய நிகழ்வு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலுள்ள Institute of Physico-Chemical and Biological Problems of Soil Science என்னும் நிறுவனத்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்டது.

ரஷ்ய ஆய்வாளர்கள் அமெரிக்காவின் New Jerseyயிலுள்ள Princeton பல்கலைக்கழகத்தின் புவி அறிவியலாளர்களுடன் இணைந்து உறைந்த நிலையிலிருந்த 300 புழுக்களை ஆய்வு செய்தனர்.

அந்த 300 புழுக்களில் இரண்டு மட்டுமே மீண்டும் உயிர் பெற்றன. உயிர் பெற்ற புழுக்களில் ஒன்று Alazeya ஆற்றுப் பகுதியில் உறைபகுதியில் இருந்து 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இது 41,700 ஆண்டுகள் பழமையானது ஆகும். இன்னொன்று 2002 ஆம் ஆண்டு Kolyma ஆற்றுப் பகுதியில் உறைபகுதியில் இருந்து 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இது 32,000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளுமே ரஷ்யாவின் குளிர்ச்சியான பகுதியாகிய Yakutiaவில் அமைந்துள்ளன.