மனநோயாளிக்கு நிகழ்ந்த கொடுமை. கண்ணை தோண்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்!

537

சென்னை அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மனநோயாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை அப்பகுதியினர் பிடித்து அடித்து கொலை செய்ததோடு, உப்புநீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேல் கயிற்றால், சடலத்தைக் கட்டி கொடூரமாகத் தொங்கவிட்டனர்.

திருப்பாளைவனம் காவல்துறையினர், மனநோயாளியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டவர் மனநோயாளி எனவும் அதே பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுற்றித்திரிந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததை வைத்து போலீசார் அவர் மனநோயாளி என முடிவுக்கு வந்தனர்.

கொலை செய்தவர்கள், மனநோயாளியின் கண்ணை தோண்டியும், மூக்கை உடைத்தும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது உடல்கூறு ஆய்வில் தெரியவந்தது.திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்த வந்ததாக அப்பாவி மூதாட்டி ருக்மணி கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல சென்னையிலும் தவறுதலாக ஒருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை கடத்தல் தமிழகத்தில் நடப்பதாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளை நம்பி மக்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள். எனவே, குழந்தை கடத்தல் பற்றி தகவல் கிடைத்தால் அதை பொலிசாருக்குதான் தெரிவிக்க வேண்டுமே தவிர சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, மனநோயாளி கொலை வழக்கில் சென்னை லைட்அவுஸ், செம்பாசிபள்ளி குப்பம், அரங்கம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 10 மீனவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்கள்தான், மனநோயாளியை மூர்க்கத்தனமாகத் தாக்கி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.