குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே தேர்வெழுதிய பெண்: வைரலாகும் புகைப்படம்!!

973

அழுத குழந்தையை தனது மடியில் வைத்து பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாய்குந்தி மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் தாப் (25) எனும் பெண் 3 குழந்தைகளுக்கு தாய். இவரது கணவர் ஒரு விவசாயி.

இவர் தன் மனைவி ஜஹானை நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா உயர்நிலை கல்வி நிறுவனத்தில் சமூக அறிவியல் பட்டப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஜஹானுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுகள் அண்மையில் நடைபெறவே, அந்த தேர்வினை எழுதுவதற்கு தனது 2 மாத கைக்குழந்தை மற்றும் கணவருடன் ஜஹான் தாப் வந்துள்ளார்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது இடையே குழந்தை அழத் தொடங்கியதால் கணவர் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டதும், தேர்வுக் கூட பொறுப்பாளரின் அனுமதியுடன் கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் ஜஹான் தாப் கொண்டு வந்தார்.

பின்னர் தேர்வு மேஜையில் இருந்து கீழே இறங்கி சம்மணமிட்டு உட்கார்ந்து குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு தாய்ப்பாலூட்டியே ஜஹான் தாப் தேர்வை எழுதி முடித்தார்.

குழந்தைக்கு பாலூட்டியபடி ஜஹான் தேர்வெழுதுவதை பார்த்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், அவரை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் வருவதற்கே அஞ்சி வரும் நிலையில், ஜஹான் தாப், தைரியமாக வெளியே வந்து தேர்வெழுதி மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் என்று பலரும் ஜஹான் தாப்-ஐ பாராட்டி வருகின்றனர்.