நெதர்லாந்து நாட்டில் திறந்தவெளி விலங்கியல் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் காரில் இருந்து வெளியே இறங்க எங்கிருந்தோ பாய்ந்துவந்து அவர்களை சிறுத்தை துரத்திய பதறவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பீக்ஸ் பெர்கன் சஃபாரி பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தது பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று. காரில் அவர்கள் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர். திறந்தவெளி வனவிலங்கு பூங்கா என்பதால் முன்னதாகவே பூங்கா அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்தே சஃபாரிக்கு அனுப்பியிருந்தனர்.
ஆனால், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து கீழே இறங்கி புல்வெளிக்குச் சென்றனர். ஒரு பெண்மணி தனது கைக்குழந்தையை தூக்கி வைத்திருந்தார். மற்றொரு ஆண் புல்வெளியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ 2 சிறுத்தைகள் அவர்களை நோக்கி பாய்ந்து வந்தன. அதனைப் பார்த்து அஞ்சிய சுற்றுலாப் பயணிகள் திகைத்துப் போயினர். ஆனால், சிறுத்தை பாய்வதற்குள் அந்த இருவரும் குழந்தையுடன் காருக்குள் பத்திரமாக ஏறி அந்த இடத்தைவிட்டு தப்பினர்.
ஆனால், சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட அந்த சில நிமிடங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களை பதறவைப்பதாக உள்ளது. அங்கு நடந்த மொத்த நிகழ்வையும் பூங்காவுக்கு வந்திருந்த ராபின் டி கிராஃப் என்பவர் படம் பிடித்திருக்கிறார்.