காட்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : மோப்ப நாயால் சிக்கிய தடயம்!!

470

மணப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதை, அந்தப் பகுதியில் சென்ற சிலர் கண்டுள்ளனர். இதையடுத்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்தப் பெண்ணின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையிலும், முகத்தில் கல்லை போட்டு சிதைக்கப்பட நிலையிலும் இருந்தது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் ஜியாவுல் ஹக், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டது.

அப்போது சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய மோப்ப நாய், அங்கே உள்ள கிராமம் ஒன்றில் கிடந்த புதிய ஷூ ஒன்றை கண்டெடுத்தது. அந்த ஷூவுக்கும், கொலை செய்த நபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த ஷூ யாருடையது என்று கண்டுபிடிக்கும் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.