மானாமதுரை அருகே ஆதிக்க சாதியினர் வெறியாட்டம் : 2 பேர் வெட்டி படுகொலை, 10 பேர் படுகாயம்!!

474

மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்துள்ளது.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் சுரேஷ் (35), ஆறுமுகம் (50), சந்திரசேகர் (31), மருது என்ற சண்முகநாதன் (26), மலைச்சாமி (50), சுகுமாறன் (23), தனசேகரன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்த ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கச்சநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆதிக்க சமூகக் குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்பது கச்சநத்தம் கிராம மக்களின் கோரிக்கை.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் போது நடவடிக்கை எடுக்காததும் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதும் மக்களின் குற்றச்சாட்டு.