புல்லட் ரெயிலில் பயணிகளை கத்தியால் குத்திய நபர்: ஒருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!

576

ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் மர்ம நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் 800க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அப்போது, பயணிகளில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் திடீரென அங்கிருந்த சக பயணிகளை சரமாரியாக குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள், ரயிலில் அங்கும் இங்குமாக ஓடி பதுங்கினர்.

கத்திக்குத்தினால் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆண் பயணிக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

படுகாயம் அடைந்த இரண்டு பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் அந்த ரயில் ஒட்டாவா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த பொலிசாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரது பெயர் இச்சிரியோ கொஜிமா (22). அவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், எதற்காக இதனை செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.