லிஃப்ட்டிலிருந்து விழுந்த பெண்: அரங்கேறிய சோக சம்பவம்!!

245

குமாரி…

லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி இருந்துள்ளார்.

இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குமாரி அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கியுள்ளார்.

இதனை அடுத்து மூன்றாவது தளத்தில் சென்று கொண்டிருக்கும் போதே பழுது ஏற்பட்டு லிப்ட் பாதியிலேயே நின்று விட்டது.

இதனால் குமாரி லிப்டில் இருந்த அலாரம் பட்டனை அழுத்தியுள்ளார். இதனையடுத்து லிப்ட் கதவு திறந்த உடன் வெளியே வரவேண்டும் என்ற அச்சத்தில் தளத்தை வந்தடைவதற்கு முன்னரே குமாரி கதவு வழியாக வெளியேறி உள்ளார். இதனால் தலைகுப்புற தரைதளத்தில் கீழே விழுந்த குமாரி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து அலாரம் சத்தம் கேட்டு விரைந்து சென்ற ஊழியர்கள் குமாரி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று குமாரியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் துரைசாமி உட்பட 27 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.