அத்தையை கொலை செய்த மருமகன்… காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல் : நடந்த விபரீதம்!!

993

தஞ்சாவூர்….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம் தேதியன்று புதைக்கப்பட்ட உடல் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,

புதைந்திருந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த பெண், திட்டக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி அன்னபூரணி என்பது தெரியவந்தது.

மேலும், பிரேத பரிசோதனையின் போது, அந்த பெண் அணிந்திருந்த நகைகள் எதுவும் இல்லாததால் நகைக்காக யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று சந்தேகித்த போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

இதனிடையே கொலை நடந்து 15 நாட்கள் ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால், இறந்த பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் கிடந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவரின் அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரின் செல்போன் எண் முதலில் காட்டியுள்ளது. அதை ஒரு ஆதாரமாக வைத்துக்கொண்டு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை சொல்லியதோடு, அன்னபூரணியை நான் தான் கொலை செய்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டதால், முருகானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார், அதாவது அன்னபூரணி பெயரில் சுமார் 1 கோடிக்கும் மேலான சொத்துகள் இருப்பதால், அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அன்னபூரணியை அடித்து கொலை செய்து, இரவோடு இரவாக அவரது உடலை ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்ததையும் தெரிவித்துள்ளனர்.