இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த பெண் : மனதை உலுக்கிய சம்பவம்!!

618

சேலம்….

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா கே மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் மரகதம் என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு மரகதம் என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் பிளாஸ்டிக் பைகளை உருக்கி பிளாஸ்டிக் உருண்டைகளாக வெளியில் அனுப்பும் கம்பெனி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இதில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். பிரபாகரன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த மரகதம் அடிக்கடி அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு மரகதம் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு அருகில் உள்ள தனது பெரிய மாமியார் வீட்டுக்கு சென்று குழந்தைகளுடன் தங்கியவர் நேற்று மாலை குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இன்று காலை பிரபாகரன் வீட்டில் இருந்து வேலைக்கு வந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு வீட்டிற்கு வந்து பிரபாகரன் பார்த்த பொழுது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. தொடர்ந்து தேடி பார்த்த போது அவர்களது கிணற்றின் அருகே செருப்புகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கருதி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி சடலங்களை மீட்டனர். இச்சம்பவம் பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தொடர்ந்து சம்பவம் பற்றி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரபாகரன் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ந்து பிரபாகரனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.