காதலர் தினத்தில் காதல் கணவருக்காக மனைவி செய்த செயல் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

304

கேரள….

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ். இவரது மனைவி பிரவிஜா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என சுபீஷின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த சூழலில் திடீரென அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனைவி பிரவிஜா, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுபீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதனைக் கேட்ட சுபீஷிம், மனைவி பிரவிஜாவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து மருத்துவ செலவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தம்பதியினர் கதிகலங்கி போயுள்ளனர். இதனை அடுத்து கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுபீஷை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், சுபீஷுக்கு மாற்று கல்லீரல் பொருத்தினால் மட்டுமே அவர் குணமடைவார் என கூறியுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையிலேயே இலவசமாக அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அப்போதுதான் தன் காதல் கணவருக்கு தனது கல்லீரலையே தானமாக வழங்க பிரவிஜா முடிவு செய்துள்ளார். உடனே இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து பிரவிஜாவின் கல்லீரல், அவரது கணவருக்கு பொருந்துமா? என்பது குறித்த பரிசோதனையில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்ததை அடுத்து, பிரவிஜாவின் கல்லீரலை அவரது கணவர் சுபிஷுக்கு பொருத்தலாம் என மருத்துவர்கள் கூறினர். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரவிஜா, தனது கணவருக்கு காதலர் தினத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டு கொண்டனர்.

பிரவிஜாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள், காதலர் தினமான நேற்று கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுபீஷுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டர். காலையில் தொடங்கிய அறுவை சிகிச்சை சுமார் 18 மணி நேரம் நடந்தது.

இதில் பிரவிஜாவின் கல்லீரல், அவரது கணவர் சுபீஷுக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் சுபீஷின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் காதல் கணவருக்கு கல்லீரலையே தானமாக வழங்கிய மனைவியின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் ‘இதுதான்யா உண்மையான காதல்’ என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.