இளம் பெண் மர்ம மரணம்.. சிக்கிய MBA பட்டதாரி : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

536

கன்னியாகுமரி…..

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் சுங்கத்துறை ஊழியர் சுப்பையா மற்றும் அவரது மனைவி மகளை கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை இருந்த ராஜேஷ், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேரூர் கடை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த சூழலில், கடந்த 6-ம் தேதி பேரூர் கடை அருகே அம்பலமுக்கு பகுதியில் செடிகள் விற்பனை செய்துவந்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்த வினிதா (வயது 38) என்பவர் மர்மமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேரூர் கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ராஜேஷ் அந்த பகுதியில் வலம் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அவரின் முகத்தை வரைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது காவல் கிணறு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ் கேரள போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் வினிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

சம்பவத்தன்று வினிதா தனியாக இருந்ததை பார்த்ததும், அவரின் செயினை பறித்துள்ளார். அப்போது அவர் கூச்சல் போட்டதால் நகையை பறித்து விட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அந்த நகையை அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் ரூ.95,000 அடகு வைத்ததாக ராஜேஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து மெர்வின் ராஜேந்திரனை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர். அங்கு நகையை அடகு வைத்த கடைக்கு அவரை அழைத்து சென்று நகையை மீட்டனர்.

பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு இடத்திலும் தனது தந்தை பெயரையும், முகவரியையும் மாற்றி கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

MBA பட்டதாரியான ராஜேஷ் பணத்திற்காக கொலை, கொள்ளையில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக தெரிய வந்தது. வினிதாவின் கழுத்தில் கிடந்த செயின் அடகு வைத்து கிடைத்த ரூ.95000-ல் ரூ.32,000-ஐ ஆன்லைன் வர்த்தகத்தில் ராஜேஷ் முதலீடு செய்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.