மனைவி இறப்பில் கைதான கணவன் : கடைசியில் நேர்ந்த சோகம்!!

363

திருப்பத்தூர்….

மனைவி இறப்பில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (வயது 26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், நந்தினியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நந்தினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு அவரை கைது செய்தனர். பின்னர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜாமணியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து ராஜாமணி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்த ராஜாமணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சிறை மருத்துவர் ராஜாமணிக்கு முதலுதவி அளித்துள்ளார்.

பின்னர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராஜாமணிக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில் சிறையில் இருந்தபோது அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.