வேறு இடத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்… காதலியுடன் எடுத்த போட்டோவை போஸ்டர் அடித்து ஒட்டிய காதலன்!!

270

நெல்லை…..

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக 2 வது வார்டில் போட்டியிட்டு உள்ளார், அதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் விஜய்ரூபன் 18 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் தனது தூரத்து உறவினரான மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் கிருபாவின் வீட்டிற்கு சென்று விஜய்ரூபன் கிருபாவை பெண் கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் கிருபாவின் தந்தை திருமணம் செய்து கொடுக்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது,

இதற்கிடையில் கிருபாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்து உள்ளனர், இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிருபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது,

இதனை அறிந்த விஜய் கிருபாவுடன் பழகும் நாட்களில் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் காதலி கிருபா எழுதி கொடுத்த காதல் கவிதை கடிதம் ஆகியவற்றை வால்போஸ்டரில் அச்சிட்டு Happy engagement என நெல்லை மாவட்டம் களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார்.

குறிப்பாக கிருபாவிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டின் முன்பும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவின் தந்தை தானியேல் இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் களக்காடு போலீசார் விசாரணை செய்து வருவதோடு களக்காடு முழுவதும் சுவரொட்டி ஒட்டிய விஜயை தேடி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய்ரூபன் இது போன்ற செயல்களை செய்ததோடு தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் அவருடைய மொபைல் எண்ணையும் அணைத்து வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது,

தனது காதலிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில் காதலியுடம் எடுத்த புகைப்படம் மற்றும் அவள் எழுதி கொடுத்த கவிதையை போஸ்டரில் அச்சிட்டு களக்காடு முழுவதும் ஒட்டி தனது எதிர்ப்பை விஜய்ரூபன் என்பவர் வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,