ஒரு தலைக்காதலால் பள்ளி மாணவி கொலை : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

367

வேலூர்…..

வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார்.

16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

இதனால் மாணவி அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராம்குமார் ( 22) பள்ளி மாணவியை 2 ஆண்டுகளாக ஒரு தலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் ராமு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர், ராமுவின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை ரஞ்சித்குமாரை சந்தித்து கண்டித்துள்ளார். இதனால், ராம்குமார் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பணி முடிந்து திரும்பிய மாணவியின் பெற்றோர் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் பள்ளி சீருடையிலேயே மாணவி கழுத்து நெறிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும், பக்கத்தில் ராமு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம். அதன் பின்னர் ராமு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.