துப்பாக்கி முனையில் மொடல் அழகி சிறைபிடிப்பு : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

890

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி காட்டி இளம் மொடலை மிரட்டி காதலிக்க ஒப்புக்கொள்ள வைத்த முரட்டு இளைஞன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் மொடல் ஒருவர் வசித்து வந்தார்.

இவரது குடியிருப்புக்கு நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மொடலின் பெற்றோரை ஓர் அறையிலும் மற்றொரு அறையில் மொடலையும் சிறை வைத்தார்.

மட்டுமின்றி குறித்த மொடலை அடித்து துன்புறுத்தியதுடன் கத்திரியாலும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் உள்ளே வந்தால் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்வேன் என்று அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொலிசார், மொடலை சிறை வைத்திருப்பதன் காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர், தனது பெயர் ரோகித் என்கிற ரீகல் சிங் எனவும் தாமும் குறித்த மொடலும் மும்பையில் வசித்தபோது காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் போபால் திரும்பிய பின்னர் தமது காதலை நிராகரித்து வருவதாகவும், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை காதலிக்க வேண்டும். அதை பத்திரத்தில் எழுதி தரவேண்டும். இல்லையென்றால் விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் உணவு மற்றும் தேவையானவற்றை பொலிசார் செய்து தந்துள்ளனர்.

நள்ளிரவு வரை நடந்த இந்தப் போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. காதலுக்கும் திருமணத்துக்கும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் அது தொடர்பாக முத்திரைத்தாளில் எழுதிய வாங்கியதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரோகித் கதவைத் திறந்தார். உடனடியாக பொலிசாரும் சட்டத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்று அந்தப் பெண்ணை பார்த்தனர்.

மொடலின் உடலில் ரத்தக் காயம் இருந்தது. ரோகித்தின் கைகளிலும் ரத்தம் வடிந்திருந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதலும் காதலியும் கிடைத்த மகிழ்ச்சியில் ரோகித் இருக்க, திடீரென்று அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறினார், அந்த மாடல்.

“என்னை எப்படியாவது காப்பாத்துங்க. வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க, காதலிப்பதாக எழுதி கொடுத்துவிட்டேன். அதைத் தவிர வேறு வழியில்லை. அவனை எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அவனை காதலிக்கவும் இல்லை” என்று அதிகாரிகள் முன்பு கண்ணிர் மல்கக் கூறியுள்ளார் அந்த மொடல்.

இதனையடுத்து ரோகித்தை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.