திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி அம்மாள் என்ற மூதாட்டி 13 பிள்ளைகள் பெற்றெடுத்தும் கோயில் தெருவில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். பிச்சை எடுக்கும் பணத்தையும் தனது மகள் வாங்கி சென்றதாகவும் அந்தோனி அம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் அந்தோனி அம்மாள். எனக்கு 13 பிள்ளைகளும் பேரன்களும் இருந்தும் அனாதையாக உள்ளேன். எனது கணவர் கேரளாவில் உள்ள அவரது தம்பி வீட்டில் உள்ளார். நான் மட்டும் இப்படி கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன்.
எனக்கு அந்த ஆண்டவர் மட்டுமே துணை என்றும் நான் இறக்கும் வரை என்னை பாதுகாத்து எனக்கு உணவு வழங்கினால் போதும். கால் உடைந்திருப்பதால் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் நான் இறந்தாலும் என்னை எனது உறவுகள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் மணிமாறன் கூறும் போது, 95 வயதான் மூதாட்டி நிலை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததும் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து வந்து மனு கொடுத்துள்ளோம். மூதாட்டியை கைவிட்ட அவரது வாரிசுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் அவருக்கான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாவட்ட சமுக நலத்துறை சார்பில் தொண்டு நிறுவன முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.