“காலையில் திருமண நடனம் மாலையில் மரணம்” துக்கத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

213

தெலங்கானா…….

தெலங்கானா மாநிலம், மெஹபூப் நகர், பாத்ததோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இவர்களின் திருமணமும் நேற்று முன்தினம் மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முந்தைய தினம் இரவும், பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இது ஒருபுறம் இருக்க, திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் லட்சுமி நடனம் ஆடவும் செய்துள்ளனர்.

தொடர்ந்து, திருமணம் நடந்து முடிந்ததையடுத்து, அன்றைய தினம் மாலை மணப்பெண் லட்சுமி, வீட்டின் கழிவறைக்குள் சென்றுள்ளார். இதனிடையே, நீண்ட நேரம் ஆகியும் கழிவறையில் இருந்து லட்சுமி வெளியே வரவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த குடும்பத்தினர், கதவை தட்டிப் பார்த்தும் பதில் வராததால், கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்ததாக கூறப்படுகிறது.

அங்கு சுயநினைவின்றி லட்சுமி கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் பதற்றம் அடைய, உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, லட்சுமியின் முடிவு பற்றியும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக, முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவலின் படி, இந்த திருமணத்தில் லட்சுமிக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பெயரில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.