கல்லூரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

261

கடலூர்…..

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது, தனலட்சுமி அங்கு தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக கல்லூரி நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவியின் சடலத்தை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனலட்சுமியின் புத்தகப் பையை சோதனையிட்டபோது, மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அதில் தன்னுடைய பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், சகோதர சகோதரிகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

மேலும், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவி தற்கொலை காரணம் தேர்வு பயம் தானா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதாக என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.