மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சுவர் கட்டிய கொடூரம் : அதிர்ச்சித் தகவல்!!

307

ஹைதராபாத்….

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான ஜி.புல்லா ரெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மகனான ராகவா ரெட்டியின் மகன் ஏக்நாத் ரெட்டிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் ரூ.75 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள புலிநகம், ரூ.35 மதிப்புள்ள வைர நெக்லஸ் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இருப்பினும், ப்ரகன்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ஏக்நாத் ரெட்டியின் குடும்பம் டார்ச்சர் செய்து வந்துள்ளது.

மேலும், கேட்கும் வரதட்சணை கொடுக்காவிட்டால் என் மகனை விவாகரத்து செய்துவிடு எனவும் ப்ரகன்யாவை மாமியார் வீட்டில் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று ப்ரகன்யாவின் முகத்தில் தலையணையை அமுக்கி கொலை செய்ய கணவன் ஏக்நாத் ரெட்டி முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ப்ரகன்யாவை வீட்டை விட்டு வெளியில் செல்லாதபடிக்கு வீட்டின் முதல் தளத்தின் உள்ள படிக்கட்டு வழியைத் தடுத்து ஏக்நாத் ரெட்டி சுவர் எழுப்பியுள்ளார். இதனால் வீட்டுக்குள் சிக்கி தவித்த ப்ரகன்யா தண்ணீர் கூட இல்லாமல் கடும் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விவகாரம் ப்ரகன்யாவின் வீட்டுக்கு தெரிந்ததையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில், கணவன் ஏக்நாத் ரெட்டி, மாமனார் ராகவா ரெட்டி மற்றும் இரு குடும்ப உறுப்பினர்கள் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதுமென்ற அளவுக்கு வரதட்சணை கொடுத்த பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டது மட்டுமின்றி, மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சுவர் எழுப்பிய கணவனின் செயல் மாநிலத்தை உலுக்கியுள்ளது.