கேள்வி கேட்ட மகள்களை கட்டையால் அடித்து கொன்ற தகப்பன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

372

காஞ்சிபுரம்…..

காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி, நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தீபா இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

வழக்கம்போல் கோவிந்தராஜ் இன்று பகல் ஓரகடம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.

அப்போது, மது போதையில் இருந்த கோவிந்தராஜ் கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கி அடித்து கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜ் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

மது போதையில் தனது இரு மகள்களையும் அடித்துக்கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமிகளின் தாயார் வேலைக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.