ஆறு மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் சிம்பு: ஆச்சரியமடைந்த அரவிந்த்சாமி!!

682

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வருவதாக நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு சிம்புவின் மீது இருந்து வந்தது.

எனவே, மணிரத்னம் படத்தில் அவர் நடித்து வருவதை பலரும் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், சிம்பு தற்போது ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு வருவதாக நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இந்தப் படத்துக்கு அவர் மிகவும் ஒழுக்கமாக இருக்கிறார்.

எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன். ஆனால், அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்’ என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இனி படப்பிடிப்புக்கு தாமதமாக வர மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என சிம்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.