இளம்பெண்ணை பைக்கில் ‘DROP’ செய்ததில் தொடங்கிய பிரச்சனை : சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!

487

கரூர்….

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமைந்துள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த வாரம், இவரது ஊரில் உள்ள கோவிலின் திருவிழா நடந்துள்ளது.

அப்போது, இதனைக் காண்பதற்காக, மணிகண்டனின் தங்கையுடன் படிக்கும் தோழி ஒருவர், அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன் பின்னர், திருவிழா முடிந்ததும் இரவு நேரத்தில், அந்த பெண்ணை அவரது ஊரான ராஜபுரத்திற்கு பைக்கில் அழைத்து சென்று, பத்திரமாக விட்டுள்ளார் மணிகண்டன்.

அப்போது, ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய மூவரும், மணிகண்டனிடம் எங்கள் ஊர் பெண்ணை எப்படி நீ பைக்கில் ஏற்றி வரலாம் எனக்கேட்டு கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, செல்போன் மூலம் ராஜபுரம் இளைஞர்கள், மணிகண்டனை மிரட்டியதாக தெரிகிறது.தனது நண்பரான சூர்யா என்பவரிடம், தனக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி உள்ளார் மணிகண்டன்.

இதனையடுத்து, நண்பரை மிரட்டியவர்களை பதிலுக்கு சூர்யாவும் செல்போனில் அழைத்து திட்டியுள்ளார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி, செல்போன் மூலம் வாய்த் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது, அடுத்தடுத்த கட்டமாக வலுத்துக் கொண்டே செல்ல, மோதலுக்கும் இரு தரப்பினர் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், மதன், அபிஷேக் மற்றும் தமிழரசன் ஆகிய மூவரும், சின்ன தாராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சூர்யாவை அடித்து உதைத்துள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர், மூன்று இளைஞர்களின் செயலை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதற்கு மத்தியில், மதன், தமிழரசன் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் அரவிந்தை தாக்க ஆரம்பித்துள்ளார்கள்.

உருட்டுக் கட்டையால் மூவரும் அவரைத் தாக்க, அங்கேயே அரவிந்த் சுருண்டு மயங்கி விழுந்திருக்கிறார். இதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் தப்பி ஓட, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அரவிந்தை மீட்டு, கரூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். ஆனால், அரவிந்த் ஏற்கனவே இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவில் திருவிழாவை பார்த்து விட்டு திரும்பிய இளம்பெண்ணை பைக்கில் ஏற்றி வந்ததன் பெயரில், நடந்த தகறாரில் தட்டிக் கேட்க போன இளைஞர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.