காதலன் பேச மறுத்ததால் விஷம் அருந்தி விட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!

263

நாகர்கோவில்….

நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும், பேசியும், செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் வாலிபருக்கு போலீஸ் வேலை கிடைத்ததுள்ளது. இந்நிலையில் காதல் ஜோடியின் காதல் ரகசியம் வாலிபரின் வீட்டினருக்கு தெரியவே, பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் தன் காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் வாலிபர் தவிர்த்து வந்துள்ளார். காதலன் பேசாததால் மனவேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது உரிய நேரத்தில் பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர். பின்னர் இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது இளம்பெண்ணை சில மாதங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாக வாலிபர் கூறியதால், இளம்பெண் சமாதானம் அடைந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களது காதல் மலர தொடர்ந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மீண்டும் இளம்பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்து வந்தார். இதனால் விரக்தியடைந்த இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை, தன் காதலனுடன் சேர்த்து வைக்கும்படி புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் வாலிபரையும், இளம்பெண்ணையும் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். அதன்படி இருவரும் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தபோது,

போலீஸ் நிலையம் வாசலில் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென அங்குள்ள பெட்டிக்கடை அருகே ஓடிச்சென்று விஷத்தை அருந்திவிட்டு, விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அப்போது கையில் விஷ பாட்டிலை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், காதலன் பேசாததால் விஷம் குடித்து விட்டு இளம்பெண் போலீஸ் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.