தகாத உறவு

தகாத உறவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். திருமண உறவில் அது பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்கள் விவாகரத்து செய்யலாம் என தெரிவித்து அதை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த தீர்ப்பானது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் இதனை காரணம் காட்டி கணவர் தகாக உறவை தொடர முயற்சிக்க மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார். தகாத உறவுக்கு தண்டனை கிடையாது என்ற தீர்ப்பின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.

திருமண வாழ்க்கையை மீறி மற்றொருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கும் 158 ஆண்டு கள் பழமையான இந்திய தண்டனை சட்டத்தின் 497வது பிரிவை நீக்கி உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த சட்டம், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக பெண்களை சித்தரிக்கிறது, பெண்களின் தனித்துவம் மற்றும் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பலாத்காரமாகாது : திருமண வாழ்க்கையை மீறி மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கும், இந்திய தண்டனை சட்டத்தின் 497வது பிரிவை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரபட்டன. இந்த சட்டத்தின் படி தனக்கு அறிமுகமான பெண்ணுடன் அவரின் கணவருடைய ஒப்புதல் இல்லாமல் ஒரு ஆண் உடலுறவு கொண்டால், அது பலாத்காரமாகாது, அது தகாத உறவாக பார்க்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பின் அர்த்தம் என்ன?
இந்த சட்டம், பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. கணவனுக்கு கட்டுப்பட்டவராக பெண் இருக்க வேண்டும் என்பதையே இந்த சட்டம் கூறுகிறது.
இது, பெண்களின் தனித்துவம், பாலின சம உரிமை, தனக்கு தேவையானதை தேர்வு செய்யும் உரிமையை மீறுவதாக உள்ளது என சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதே நேரத்தில், இந்த சட்டத்தில், ஆண்கள் மீது மட்டுமே குற்றம் பதிவு செய்யப்படுகிறது, பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கின்றனர். பாலின சம உரிமை உள்ள நிலையில், பெண்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் அல்லது சட்டத்தை நீக்க வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப். நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இவர்கள் அளித்துள்ள தீர்ப்பில், திருமணஉறவுக்கு அப்பாற்பட்டு மற்றொருவருடன் உறவு கொள்வது குற்றம் என்பது பழங்கால சட்டமாகும்.
இது, பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. ஆணுக்கு கட்டுப்பட்டவராக பெண் இருக்க வேண்டும் என்பதாகவே இந்த சட்டம் உள்ளது. இது, பெண்களுக்கான தனித்துவம், தனக்கு விருப்பமானதை தேர்வு செய்யும் உரிமை, தனி மனித சுதந்திரம், பாலின சம உரிமைக்கு எதிராக உள்ளது.
விவாகரத்து : தகாத உறவு என்பது, திருமண உறவை பாதிக்காது. அதே நேரத்தில் திருமண உறவில் பாதிப்பு இருந்தால், தகாத உறவுக்கு வழி வகுத்து விடும்.
அதனால், தகாத உறவை குற்றமாக பார்க்க வேண்டியதில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின், 497வது பிரிவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின், 198வது பிரிவு ஆகியவை, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அவை சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படுகிறது,
தகாத உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கக் கூடாது. அதே நேரத்தில், இது தவறு தான். சிவில் சட்டங்களின்படி, தகாத உறவு குறித்து விசாரிக்கலாம்.
தகாத உறவால், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், தற்கொலையைத் துாண்டியதாக வழக்கு தொடரலாம். அதே போல், தகாத உறவால் பாதிக்கப்பட்டவர், சிவில் சட்டங்களின்படி விவாகரத்து கோர முடியும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.