தமிழக வீரரின் மனைவி

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் திகதி பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உயிரிழந்த வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி கூறுகையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது என கூறியுள்ளார்.