தாலி கட்டி வரும்போது காதலன் பலி : காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!

229

கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் நவீன்குமார்(23). இவர் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீசில் சேர தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத் தேர்வுக்காக படித்து வந்தார்.

மேலும், கபடி வீரரான இவர் உள்ளூர் கபடி போட்டிகளிலும் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் நவின் குமார் நேற்று அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது பைக்கில் புறப்பட்டார்.

ஆனால், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தனது காதலி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 19 வயது பெண்ணுடன் பெரம்பலூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாவுக்கு மஞ்சள் தாலியை கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.

வாலிகண்டபுரத்தை கடந்து செல்லும்போது தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் நவீன்குமார் தலை மற்றும் நெற்றியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது பின்னால் அமர்ந்து வந்த பிரியா சுயநினைவு இழந்த நிலையில் தூக்கி வீசப்பட்டு அருகே கிடந்துள்ளார். தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், நவீன்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகவும், பிரியாவை சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று மதியத்திற்குப் பிறகு தகவலறிந்து பிரியாவின் சகோதரர் ஒருவர் வந்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை அளித்து கொள்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டார்.

சந்தியா இன்னமும் வாய் திறந்து பேசாததால் இருவருக்கும் எப்போது திருமணம் நடந்திருக்கும் என்பது போலீசாருக்கு கேள்விக்குறியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.