திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை சோதனை : ஊரை விட்டே ஒதுக்கப்பட்ட குடும்பம்!!

1115

கன்னித்தன்மை சோதனை

திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒன்று சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கஞ்சர்பாத் வகுப்பினரிடையே விநோத வழக்கம் இருந்து வருகிறது. அதன்படி புதிதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன்பு தனது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும்.

இந்த வகுப்பை சேர்ந்த இளைஞர்கள் இந்த வழக்கத்தை எதிர்த்து இணையதளம் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம் சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் செய்ததன் பேரில், தானே பொலிசார் அம்பர்நாத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கஞ்சர்பாத் வகுப்பில் உள்ள ஜாதி பஞ்சாயத்து தனது குடும்பத்தை கடந்த ஓராண்டு காலமாக சமூக புறக்கணிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

தங்களது குடும்பத்துடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கஞ்சர்பாத் வகுப்பினருக்கு ஜாதி பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் விவேக் தமாய்ச்சிகர் என்பவது பாட்டி கடந்த திங்கட்கிழமை இறந்துள்ளார். ஆனால் அவரது இறுதிச் சடங்கிற்கு கூட யாருமே செல்லவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ஊர்க்காரர்கள் அதே பகுதியில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் நடத்தியதாக விவேக் தமாய்ச்சிகர் தெரிவித்துள்ளார்.

சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட குடும்பம் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.