நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
தான் மட்டுமன்றி இன்னும் சில பெண்களுடன் அபி சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக நடிகை அதிதி மேனன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
‘பட்டதாரி’ என்ற தமிழ் படத்தில் இணைந்து நடித்த ஜோடி அபி சரவணன்-அதிதி மேனன். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், சில மாதங்களிலேயே பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நடிகை அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக அபி சரவணன் பொலிசில் புகார் அளித்தார். ஆனால் அதனை மறுத்த அதிதி மேனன், தன்னை பதிவு திருமணம் செய்தது போல் அபி சரவணன் போலி ஆவணங்கள் தயாரித்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன், அதிதி மேனனுடன் பதிவுத் திருமணம் செய்தது உண்மை தான் என்றும், அதற்கான புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் வெளியிட்டார்.
அப்பொது அவர் கூறுகையில், ‘அவர் குறித்து நான் கூறும் குற்றச்சாட்டுக்கான எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. எங்களுக்குள் நல் இணக்கம், சமாதானம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். நானும் அவளும் கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம்.
ஆரம்பத்தில் நட்பாக இருந்த நாங்கள், பிறகு காதலிக்க ஆரம்பித்தோம். வீட்டில் பெற்றோரின் அனுமதியோடு பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இருந்ததில்லை. சந்தோஷமாகத்தான் இருந்தோம்.
நான் கேரளா வெள்ளத்திற்கான உதவிக்கான பணிகளில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து சுஜித் என்பவருடன் என் வீட்டில் இருந்த பொருட்களுடன் அதிதி வெளியேறிவிட்டார். நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது எவ்வளவோ சமாதானமாகப் பேச நினைத்தேன். ஏற்கனவே ஒரு லவ் ஃபெயிலியர், அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆயிடுச்சி.
அதை வைத்தே சில நாட்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். உண்மையாக நேசிக்கிறாதா நினைத்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இன்னொரு பையன் கூடப் போறதுக்கு என்னை ஏன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணணும்? அவளால் இப்போது என் குடும்பமே மன உளைச்சலில் இருக்கு.
என்னிடம் திருமணமான சான்றிதழ், அதிதி என் வீட்டிலிருந்து யாருடன் கிளம்பிச் சென்றார் என்கிற வீடியோ வரை எல்லா ஆதாரமும் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் கர்ப்பமான நேரங்களில் எல்லாம் கருவைக் கலைத்திருக்கிறார். காரணம் கேட்டதற்கு அது என்னுடைய தனிப்பட்ட விடயம் என்றும் கூறினார்.
பின்பு, தொடர்ந்து கண்காணித்ததில் உடலை அழகாக்கக்கூடிய ஸ்டெம்செல் ஊசியை அடிக்கடி போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் உடல் பளபளப்புடன் மிளிரும். இந்த ஊசியைப் போட்டால் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இந்த ஒரு ஊசிக்கு 20,000 ரூபாய் வரை செலவாகும்.
மேலும், இந்த ஊசிப் போடும்போது கர்ப்பம் தரிக்கக்கூடாது. ஏனென்றால், குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். இதையும் எச்சரித்தேன், கேட்கவில்லை. இதுதான் எங்கள் மனஸ்தாபத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது’ என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது அதிதியுடன் இருக்கும் ஆண் நண்பர் அவரை மூளைச்சலவை செய்துவிட்டார். தாம் அளித்த புகாரைத் திரும்பப் பெற அவர் மிரட்டினார். பிரச்சனைகளை மறந்து மனம் மாறி திரும்பி வந்தால் அதிதி மேனனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிதி மேனன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூறுகையில், ‘பட்டதாரி படத்தில் அவருடன் நடித்தபோது நட்பாகி, பிறகு அது காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழை சமர்பித்தார்.
‘பட்டதாரி’ படத்திற்கு பிறகு நான் சில படங்களில் நடித்தேன். அப்போது தான் அபி சரவணனுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை மனதளவில் பாதித்தது. இது தொடர்ந்ததால் அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவு செய்தேன்.
அதன் பின்னர் என் சமூக வலைதளங்களின் கணக்குகளில் நுழைந்து போலியான ஆவணங்களை அவரே பதிவேற்றியுள்ளார். அதை ஆதாரமாக காண்பித்து வருகிறார். அவை யாவும் போலியானவை என நிரூபித்திருக்கிறேன். அதனால் தான் புகார் அளிக்க வந்தேன்.
நான் அவருடைய வீட்டில் எந்தப் பொருட்களையும் திருடவில்லை. யாருடனும் எனக்கு தொடர்பில்லை. அவருக்கு சமூக சேவை என்கிற பெயரில் பணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தன. அதனால் அதற்கு பயந்துதான் அவரை விட்டு விலகி இருக்கிறேன். மேலும், நான் மட்டுமல்ல இன்னும் சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது.
உண்மையிலேயே எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. எனக்கும் அபி சரவணனுக்கும் திருமணம் நடந்திருந்தால் நான் விவாகரத்து கேட்டிருப்பேன். நண்பர்களாக இருப்போம் என்று தான் பிரிந்தோம். என் பக்கம் உண்மை இருக்கிறது. அது நிச்சயம் வெற்றிபெறும். என் மீது அபி சரவணன் கூறும் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்கட்டும், அதற்கு பதில் சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.