பழிக்குப்பழி : மகனை கொலை செய்தவனை நடுரோட்டில் வெட்டி சாய்த்த தந்தை – பின்னணி தகவல்கள்!!

593

கொலை

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சொந்த மகனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், இளைஞரை பரபரப்பான சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான அட்டப்பூர் சாலையில், ரத்தத்தை உறையவைக்கும் இந்தக் கொலை நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் கவுட். இவரும் ரமேஷ் கவுட்(38) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ரமேஷ் கவுடுக்கும், இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

அந்தப் பெண்ணுடன் மகேஷும் பேசியுள்ளார். இதைக் ரமேஷ் கண்டித்தும் மகேஷ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகள் 3 பேர் உதவியுடன் மகேஷை மலைப்பகுதி கோயிலுக்கு அழைத்துச்சென்று மது குடிக்கவைத்து கொலை செய்து எரித்துவிட்டனர்.

அதன்பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மகேஷை கொலை செய்தது, அவரின் நண்பர் ரமேஷ் என்கிற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து பொலிசார் அவரைக் கைது செய்தனர். அந்தக் கொலை வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே மகேஷை கொலை செய்த ரமேஷை பழிவாங்குவதற்காக மகேஷின் தந்தை கிருஷ்ணா கவுடும், உறவினர் லட்சுமண் கவுடும் நீண்டநாட்களாகத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரமேஷ் கவுடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஹைதராபாத்தில் உள்ள அட்டப்பூர் பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் ரமேஷ் வந்தபோது, அவரை மகேஷின் தந்தை கிருஷ்ணாவும், மாமா லட்சுமனும் கையில் கத்தியுடன் துரத்தி ஓட ஓட வெட்டினார்கள். ரத்த காயத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ரமேஷ் தலைதெறிக்க ஓடினார்.

வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையில் ரமேஷால் ஓடமுடியாமல் கீழே விழுந்தார். அவரை கிருஷ்ணாவும், லட்சுமணும் பட்டப்பகலில் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெற்றி எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஒருவர் கூட இதைத் தடுக்கவில்லை, மாறாக செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும், இந்தச் சம்பவம் நடக்கும் போது ஒரு பொலிஸ் வாகனம் சென்றுள்ளது, அவர்களும் இதைக் கண்டும் காணாமல் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில்பார்த்த மக்கள், இந்தச் சம்பவம் நடக்கும் இடத்தின் அருகே இரு பொலிஸ் காவலர் நின்றிருந்தும் கொலைகாரர்களைத் தடுக்கவில்லை,

அந்தப் பகுதியில் ஒரு பொலிஸ் வாகனம் சென்றது, அவர்கள் வாகனத்தை நிறுத்தி இதைத் தடுத்திருக்கலாம் ஆனால், அவர்களும் தடுக்கவில்லை என்றனர். பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

கொலை நடந்து சிறிது நேரம் கடந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் கொலையாளிகள் சென்ற வாகனத்தை விரட்டிப் பிடித்து அதில் இருந்த கிருஷ்ணாவையும், லட்சுமணனையும் கைது செய்தனர்.

ஆனால், கொலை செய்தவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு மிகவும் இயல்பாக பொலிஸ் வாகனத்தில் ஏறிச் சென்றனர். ஹைதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.