மதுரை….

திருமணத்திற்கு வரன் தேடுவது எப்போதுமே சிரமமான காரியம் தான். அறிவியல் வளர்ச்சி காரணமாக மேட்ரிமோனி உள்ளிட்ட வசதிகள் வந்த பிறகும் கூட தங்களுக்கு இணையான வரங்களை கண்டறிய முடியாமல் பலரும் தவிப்பதை சமகாலத்தில் அதிகளவில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு மணமகள் தேவை என போஸ்டர் அடித்து ஒட்டிய நிகழ்வு பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஜெகன். 27 வயதான இவர் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நான்கு ஆண்டுகளாக ஜெகனுக்கு பெண் பார்த்து வந்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.

இருப்பினும் திருமணம் ஆகாததால் மதுரை புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மணமகள் தேவை என்ன போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார் ஜெகன். தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஜெகன் பகுதி நேர வேலையாக ஒரு நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

அப்படித்தான் தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறுகிறார் அவர். நான்கு வருடங்களாக வரன் பார்த்தும் அமையாததால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கும் ஜெகன், புரோக்கர்கள் மூலமாகவும் பெண் கிடைக்கவில்லை என்றும் போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று நினைத்து இருந்ததாகவும் ஆனால் மீண்டும் புரோக்கர்களை அதிகளவில் தன்னை தொடர்பு கொள்வதாகவும் கவலையுடன் கூறுகிறார்.

இந்நிலையில் ஜெகனின் நண்பர்கள் இது பற்றி பேசுகையில் “தற்போது சமூக வலை தளங்களில் இந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் எங்களது நண்பனுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என நம்புகிறோம்” என்றனர்.

மதுரையில் மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய நிகழ்வு அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது அத்துடன் இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.