மனைவியின் தங்கை மீது காதல்.. வசிய மருந்துடன் வீட்டுக்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

824

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் படித்துள்ள இவர் கடத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ராஜேஷின் மனைவி உள்ளூரிலேயே செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

திருமணமான பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், ராஜேஷ் மற்றும் அவரது மனைவி இடையே ஏற்பட்ட தகராறு எல்லை மீறியிருக்கிறது. இதனால் தனது கணவனை பிரிந்து தனியாக வசித்துவந்திருக்கிறார் அந்த பெண். இந்நிலையில், அவருக்கு வெளிநாட்டில் செவிலியர் பணி கிடைத்திருக்கிறது. சமீபத்தில் அந்த பெண் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, ராஜேஷ் தனது மனைவியின் சகோதரியின் மீது காதல் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்றிருக்கிறார் ராஜேஷ். அப்போது, அவரை கண்டு திடுக்கிட அந்த இளம்பெண்ணின் மீது தான் கொண்டுவந்த திரவத்தை ஊற்றியுள்ளார் ராஜேஷ். அது அமிலமாக இருக்குமோ என்ற அச்சத்தில் அலறிய அந்த பெண் உதவி கேட்டு கூச்சலிட்டிருக்கிறார்.

சத்தத்தை கேட்டு பதறிப்போய் ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், முகத்தில் திரவம் ஊற்றப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை உடனடியாக காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் இல்லை எனவும் எண்ணெய் போன்ற திரவம் என்றும் கூறியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் காவல்துறையின் உடனடியாக ராஜேஷை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மனைவியின் தங்கையை காதலித்ததாகவும் ஆகவே அவரை வசியப்படுத்த மருந்துடன் சென்றதாக கூறியுள்ளார் ராஜேஷ். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ராஜேஷை பின்னர் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.