விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த லண்டன் பெண் : தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம்!!

532

தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம்

லண்டனை சேர்ந்த பெண் கணவருடன் தேனிலவு சென்ற இடத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

நிகோலா ஸ்பென்சர் (42) என்ற பெண்ணுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அதே மாதம் 11ஆம் திகதி புதுமணதம்பதிகள் கெனரி தீவுக்கு தேனிலவு சென்றனர்.

தேனிலவுக்கு கிளம்பும் போதே நிகோலாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தேனிலவுக்கு கிளம்பினார். போகும் வழியில் நிகோலா ரத்த வாந்தி எடுத்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு நிகோலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நீரிழப்பு பிரச்சனை மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில மருந்துகளை கொடுத்தனர்.

இதன் பின்னரும் அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தேனிலவுக்கு சென்ற மூன்றாவது நாளே லண்டனுக்கு திரும்ப நிகோலாவும், ஜேசனும் முடிவு செய்தனர். அதன்படி விமானத்தில் அவர்கள் லண்டனுக்கு வந்து கொண்டிருக்கும் போது நிகோலா தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்தார்.

இதனால் விமானம் போர்சுகல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னரே உயிரிழந்தார்.
அதாவது திருமணமான 6 நாளில் மண்ணை விட்டு மறைந்தார் நிகோலா.

நிகோலா உயிரிழந்த பின்னர் போர்ச்சுகலில் ஒரு பிரேத பரிசோதனையும், பிரித்தானியாவில் ஒரு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் அவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியாதது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரோக்கியமாக இருந்த நிகோலாவுக்கு இந்த நிலையா என அவர்கள் மன வேதனை அடைந்தனர். திருமணத்துக்கு முன்னரே நிகோலாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.

அவர்களுக்கு தாயின் இழப்பு மிகுந்த வருத்தத்தை கொடுத்ததுடன் அதற்கான காரணம் தெரியாததால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையில் நிகோலாவின் மரணம் தொடர்பாக வரும் 27ஆம் திகதி விசாரணை தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.