நடந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவி முறையாக கணக்கு காட்டாததால், அவர் மீது சந்தேகம் அடைந்த கணவன் அவரை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் வடக்கு ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசந்தர். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய இவர் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணம் குறித்து மனைவி மகாலட்சுமியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது மனைவி முறையாக பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து அவரிடம் பல முறை கேட்ட போதும், மகாலட்சுமி எந்த ஒரு சரியான பதிலும் சொல்லாத காரணத்தினால், இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதையடுத்து இன்று காலை இதன் காரணமாக சண்டை ஏற்பட, கோபத்தின் உச்சிக்கு சென்ற பாலசந்தர், மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.